Monday, November 4, 2013



திடீர் பணக்காரத்தனம் - சில 

குறிப்புகள் 


      மரணம் ஒன்றைத் தவிர மேட்ச் ஃபிக்ஸிங் இல்லாத ஏரியாவே கிடையாது போலிருக்கிறது. அழகிப் போட்டிகளானாலும் சரி, கிரிக்கெட் போட்டிகளானாலும் சரி, என்னவாவது அவார்டு சங்கதியானாலும் சரி. ஒரு திட்டம், ஒரு மேத்தமேடிக்ஸ், ஒரு நோக்கம் யாருக்காவது இருந்துவிடுகிறது.

  அரசியலை எல்லாம் கொஞ்சம் தள்ளி வையுங்கள். இந்தச் சேதியைக் கேளுங்கள். உலகின் மிக காஸ்ட்லியான நகரம் எதுவென்று தெரியுமா உங்களுக்கு? எங்கு வாழ்வது அதிக செலவு சாப்பிடக்கூடியது? நியூ யார்க்? மாஸ்கோ? டோக்கியோ? பாரிஸ்?

    நிச்சயமாக இல்லை. ஆப்பிரிக்க தேசமான அங்கோலாவின் தலைநகரம் லுவாண்டாவைச் சுட்டிக்காட்டுகின்றன புள்ளிவிவரங்கள். என்னடா விசேடம் என்று பார்த்தால் மாஸ்கோவில் நாலாயிரத்தி ஐந்நூறு டாலர் (சுமார் ரூ.2.7 லட்சம்) மாசாந்திர வாடகைக்குக் கிடைக்கக்கூடிய ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்கு இங்கே பத்தாயிரம் டாலர் (சுமார் ரூ. 6.1 லட்சம்) கொடுத்தாக வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் ஓரளவு டீசண்ட்டான ஓட்டல் அறை நமக்குக் கிடைத்துவிடும். லுவாண்டாவில் அதற்கு நீங்கள் ஆறாயிரத்தி முன்னூறு டாலர் (சுமார் ரூ. 3.8 லட்சம்) கொடுத்தாக வேண்டும். ஒரு ஃபுல் மீல்ஸுக்கு நமக்கு நூறு ரூபாய் செலவா? அங்கே அதுவே நாநூற்று எழுபது ரூபா. சாப்பாடு, போக்குவரத்து, பொழுதுபோக்கு என்று ஆரம்பித்து சகட்டு மேனிக்கு எல்லாவற்றுக்கும் மற்ற ஊர்களின் விலை விவரங்களைக் காட்டிலும் குறைந்தது ஐந்து மடங்கு அதிகம். இதிலேயே இன்னும் கொஞ்சம் பணக்காரத்தனம் தேவையென்றால் இன்னும் எடு, இன்னும் கொடு, அள்ளி வீசு!

  வரவர லுவாண்டா படு பயங்கர பணக்காரர்களின் க்ஷேத்திரமாக மாறிக்கொண்டே போகிறது. இது எங்கே போய் முடியுமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிரு க்கிறார்கள் அங்கோலாவாசிகள்.

  இதில் கவலைப்பட என்ன இருக்கிறது? நாடு நகரம் வளர்ந்தால் நல்லதுதானே? என்றால், இது அப்படியல்ல. ஒரு நகரம் பெரிய அளவில் வளர்ச்சியுறுகிறது என்றால் சகலமான இனங்களிலும் வளர்ச்சி தெரிந்தாக வேண்டும். அங்கோலா ஒன்றும் அமெரிக்காவை நிகர்த்த தேசமல்ல. ஏழைமைக்குப் பேர் போன ஆப்பிரிக்க நாடுகளில் இதுவும் ஒன்று. கொஞ்சம் காப்பி இருக்கிறது. டெக்ஸ்டைல் துறையும் சிமெண்டு உற்பத்தித் துறையும் ஓரளவு காசு கொடுக்கிறது. ஏற்றுமதிக் காசு. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றாலும் ஏதோ கொஞ்சம் பெட்ரோலிய உற்பத்தியும் இருக்கிறது.
நாளது தேதி வரை குடிஜனங்களுக்குக் குடிக்க நல்ல தண்ணீர் கொடுப்பதற்கும் தேவையான அளவுக்கு மின்சார சப்ளை செய்வதற்கும் அரசாங்கமானது திண்டாடி, தெருப்பொறுக்கிக் கொண்டுதான் இருக்கிறது. மெஜாரிடி ஏழைகள்; பத்தாத குறைக்கு 2002ம் வருஷம் வரைக்கும் சிவில் யுத்தம் வேறு. பத்தே வருஷத்தில் சிலிர்த்துக்கொண்டு எழுந்துவிட்டதாகச் சுட்டிக்காட்ட நாலைந்து உதாரணங்கள் கூடத் தேறாத தேசம்தான்.

  ஆனாலும் அங்கோலாவின் தலைநகரம்தான் உலகின் அதிபயங்கர செலவாளி நகரம். நீங்களும் நானும் சுற்றுலாவுக்காகப் போனால்கூட சொத்து பத்தாது. நிம்மதியாக நாலு இட்லி தின்ன முடியாது. பர்ஸ் பழுத்துவிடும்.
வளரா தேசங்களின் ஏதோ ஒரு நகரை எடுத்துக்கொண்டு, திட்டமிட்டு அதன் வாழ்க்கைத் தரத்தை மிக உயர்த்திக் காட்டுவதன்மூலம் பெரும் வர்த்தக முதலைகள் பல தகிடுதத்தக் காரியங்களைச் சாதிக்க இயலும். கண்ணுக்குத் தெரியாமல் இதில் சில அரசுகளும் சம்மந்தப்படும். அதெல்லாம் பெரும்பணக் கணக்கு. ஒன்றுமே இல்லாது போனாலும் சுற்றுலா வருமானத்தை நம்பவே முடியாத அளவுக்கு உயர்த்திக்கொள்ளும் சாலாக்கு. லாபத்தின் பங்குகள் ஈரேழு பதினாலு லோகங்களுக்கும் சௌக்கியமாகப் பாய்ந்து செல்லும். ஆனால் கண்ணுக்குத் தெரியாது.

  இதனை நாகரிகக் கொள்ளை என்பார்கள். அவஸ்தையெல்லாம் உள்ளூர்வாசிகளுக்குத்தான். நியூயார்க்கைக் காட்டிலும், மாஸ்கோவைக் காட்டிலும், டோக்கியோவைக் காட்டிலும் அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவைப் பெரும் பணக்கார நகரமாக முன்வைப்பதன் அரசியல், பொருளாதார சூழ்ச்சி நோக்கங்கள் காலப்போக்கில் அந்த தேசத்தை இன்னும் வறுமையின் கோரப்பிடியில்தான் இழுத்துச் சேர்க்கும்.

    இப்போதைக்கு உலகின் அதி உன்னத சாராய சங்கதிகளை மொத்தமாக ருசிக்க விரும்பும் பெரும்பணக்காரர்கள் கண்ணை மூடிக்கொண்டு லுவாண்டாவுக்கு ஃப்ளைட்டு பிடிக்கலாம். எங்குமே கிடைக்காது என்று சொல்லப்படுவதெல்லாம்கூட அங்கே கிடைக்கும். போகிறபோது ஆளுக்கு ஒரு தண்ணி கேன் எடுத்துச் சென்று அந்த ஊர் மக்களுக்கு தட்சிணையாகக் கொடுக்க முடிந்தால் போகிற வழிக்குப் புண்ணியமாய்ப் போகும்.

  அங்கோலாவில் சாராயத்துக்குப் பஞ்சமில்லை. குடிதண்ணீர்தான் பெரும்பாடு.

நன்றி ;தி இந்து 


ஹிட்லரை அடிபணிய வைத்த 

வீரத்தமிழன் - செண்பகராமன்



    எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாததொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள். ஆம் தோழர்களே அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடையம் தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.

    இத்தனைக்கும் செண்பகராமன் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரத்திற்காய் போற்களமாடிய வீரர்கள் யார் என்று எமது தமிழ் சகோதரர்களிடம் ஒரு கேள்வி கேட்டால்; உடனே சுபாஸ் சந்திரபோஸ், பகத்சிங் என ஒரு பட்டியலை தருவார்கள். அவர்களிடம் நான் கேட்கிறேன் தமிழர்கள் ஒருவரும் போராடவில்லையா? அல்லது அவர்களின் போராட்டத்தில் வீரியம் இல்லையா? எண்ணற்ற தமிழ் மறவர்கள் விடுதலைக்காக வீரகாவியமானார்கள். வெள்ளையனின் பீரங்கிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் முன்னால் வாளும் வேலும் கொண்டு போராடினால் சாவு நிச்சயம் என்று தெரிந்தும்; அடிமையாக வாழ்வதைவிட செத்துமடிவதே மேல் போராடிய வீரபாண்டிய கட்டப்பொம்மன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார் போன்ற எண்ணற்ற தமிழ் மறவர்களையெல்லாம் பார்க்க உங்களுக்கு வீரர்களாக தெரியவில்லையா? இப்படி தமிழர்கள் இருப்பதால் தான் தமிழினத்தின் வரலாறு மண்ணோடு மண்ணாகிப் போகிறது. தமிழர்களாகிய நாம் கூட தமிழ் வீரர்களை நினைவுகூறாவிட்டால் வேறு எவன் நினைவுகூறுவான்? கேரளாவிலோ அல்லது ஆந்திராவிலோ போய் கேட்டுப்பாருங்கள் வீரபாண்டிய கட்டப்பொம்மன் யார் என்று? ஒரு பத்து போராவது சரியான பதில் தருவார்களா?

  பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜெர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

    ஜெர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.

  தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக்கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

    தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.

  ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார். ‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது என்று அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.

 முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.

   இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி) என்று பெயர் கொடுக்கப்பட்டது. ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.

     யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.

    இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.

   இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர்பிரியத் தான் போகிறது. எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்த வேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி இவ்வுலகத்தை விட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.

நன்றி ;முகநூல் நண்பர் 
நெய்மணம் கமழும் மிளகாய்...  புதுவை விவசாயி சாதனை...


   

      மிளகாயில் நெய்யின் மணத்தைப் புகுத்தி புதுவை விவசாயி வெங்கடபதி சாதனை படைத்துள்ளார். இவர் வேளாண் துறையில் செய்த சாதனைகளுக்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர். புதுவகையான இந்த மிளகாய் தொடர்பாக அவரது மகள் ஸ்ரீலட்சுமி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

    மிளகாய் வகைகளில் பரமக்குடி, சிவகாசி, நாட்டு ரகம், குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய் உள்ளன. தற்போது நெய் மணம் கமழும் மிளகாயை உருவாக்கியுள்ளோம். சாம்பார், ரசம், குழம்பு வைக்கும்போது இந்த வகை மிளகாய் ஒன்றை நான்காக பிளந்து சேர்த்தால், கொதி நிலையில் நெய்மணத்தை நன்கு உணரலாம்.

   இந்த சிறப்பு இயல்பை இதர மிளகாய் இனங்களிலும் புகுத்த ஆராய்ச்சி செய்துவருகிறோம். நெய்மணம் கமழும் மிளகாய் விதைகளில் காமா கதிர்வீச்சு செய்ய, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையம் அனுமதி தந்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் மிளகாயின் நிறம், இலை ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவரலாம். மஞ்சள், பச்சை, வெள்ளை, நீலம், சிவப்பு ஆகிய நிறங்களில் மிளகாயை உருவாக்க முடியும் என ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவற்றை உருவாக்க முயற்சிப்போம்.

     தமிழக, புதுவை மக்களுக்கு 2 மாதங்களுக்கு இலவசமாக இந்த மிளகாயை தரும் எண்ணம் உள்ளது. தொடர் ஆராய்ச்சியின் மூலம் அதிகளவு மிளகாய் செடிகளை வளர்த்து வருகிறோம். மேலும் சமையலில் குழம்பு வைக்கும்போது இந்த மிளகாயை பயன்படுத்தினால், மிளகாய் தூளை குறைத்துப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக வெங்கடபதி கூறுகையில், "மலை மீதுதான் இவ்வகை மிளகாய்கள் வளரும். ஆனால், சாதாரணப் பகுதிகளிலேயே தற்போது இந்த மிளகாய் விளைகிறது. முதலில் இந்த மிளகாய் மனிதர்களுக்கு உகந்ததா என பலவித ஆராய்ச்சிகள் செய்து, நாங்கள் சாப்பிட்டுப் பார்த்த பிறகே மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்" என்றார்.

நன்றி ;தி இந்து