உழவர்களின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழுக்களை கொண்டு உரம் தயாரிக்கும் முறை பரவலாகி வருகிறது. இது நல்ல தொழிலாகவும் விவசாயிகள் சிலரால் தொடங்கப்பட்டு லாபமுள்ள தொழிலாக சிறப்பு பெற்றுள்ளது.
மண்புழு வாழ உதவும் சூழ்நிலை
மண்புழு உரத்தயாரிப்பில் குழி முறை,குவியல் முறைதொட்டி முறை மற்றும் சில்பாலின் முறை என்ற முறைகளில் மண்புழு உரத்தை தயாரிக்கலாம். ஆனால் மிகக்குறைந்த செலவில் மண்புழு உரத்தை தயாரிக்க சில்பாலின் என்ற முறையை கையாளலாம். இந்த முறையானது ஏழை விவசாயிகளும் மண்புழு உரத்தை சொந்தமாக தயாரிக்க ஏற்ற முறையாக இருக்கிறது.
மண்புழுக்கள் அதிக அளவில் பெருகினால் மட்டுமே அதிக அளவு தரமான மண்புழு உரம் கிடைக்கும். இதனை பெற, குவியலில் விடப்படும் மண்புழுக்கள் நல்ல நிலையில் வளர்ச்சியடைந்து, இனப்பெருக்கம் செய்வது முக்கியம். மண்புழுக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நல்ல காற்றோட்டம், ஈரப்பதம், உணவு மற்றும் சரியான வெப்பநிலை ஆகியவை இருக்க வேண்டும். மண்புழுக்கள் வசிப்பதற்கான இடத்தில் நிலவும் ஈரப்பதம் எப்போதும் சரியான அளவில் இருப்பது அவசியம். ஈரப்பதம் குறைந்து போனால் புழுக்கள் பாதிக்கப்படும். இதே போல் ஈரப்பதம் அதிகமானால் புழுக்கள் மூச்சு விட முடியாமல் திணறி இறந்து போகும். இதற்கு காரணம், மண்புழுக்கள் அவற்றின் தோல் மூலம் தான் சுவாசிக்கின்றன. ஈரப்பதம் அதிகமாகும் போது இந்த தோலின் வழியாக சுவாசிக்க முடியாமல் அவை மடிகின்றன.
இதே போல் மண்புழுக்களுக்கு உணவாக காய்கறி மற்றும் இயற்கை கழிவுகளை மாட்டுச்சாணத்துடன் கலந்து கொடுக்க வேண்டும். மண்புழுக்கள் இதை உண்டு கழிவுகளை வெளியேற்றுகின்றன. இந்த கழிவுகளில் தான் பயிர்களுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. மண்புழு வாழ்வதற்கான வெப்பநிலை என்பது 16 முதல் 28 டிகிரி சென்டிகிரேட் ஆகும். வெப்பநிலை அதிகம் உள்ள இடங்களில் நிழலில் புழுக்களை வளர்த்து நீர் தெளித்து குளிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
சில்பாலின் முறை மண்புழு உரத்தயாரிப்பு
மண்புழு உரத்தை தயாரிப்பதற்கு ஏழை விவசாயிகளுக்கான சிறந்த முறையாக சில்பாலின் முறை உதவுகிறது. சில்பாலின் பை என்பது சந்தையில் கிடைக்கக்கூடிய ஒரு வகை செயற்கை பொருளால் ஆன பை ஆகும். சிறிய அளவில் மண்புழு உரத்தயாரிப்பில் இறங்க விரும்பும் விவசாயிகள் 12 அடி நீளம், 4 அடி அகலம் மற்றும் இரண்டரை அடி உயரம் இருக்கும்படியான சில்பாலின் பையை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த பையை பொருத்துவதற்கு 13 அடி நீளமுள்ள நான்கு சவுக்கு மரங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இதே போல் 4 அடி உயரமுள்ள 14 சவுக்கு மரங்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.
சில்பாலின் பையில் நீர் வெளியேறுவதற்காக துளைகள் உள்ள பகுதி தாழ்வாக இருக்கும்படி சற்று தொய்வாக நிலை நிறுத்த வேண்டும். சவுக்கு மரத்தை சில்பாலின் பையுடன் சேர்த்துக் கட்ட கட்டுக்கம்பியையோ, பிளாஸ்டிகள் கயிற்றையோ பயன்படுத்தலாம். அதிகப்படியான நீர்வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகால் பகுதியின் வெளியில் 2க்கு2க்கு2 என்ற அளவில் குழி அமைத்து மண்புழு வடிநீரை பெறலாம். சில்பாலின் பையின் கீழ்பகுதியில் ஜல்லிக்கற்களையோ அல்லது தென்னை நார்க்கழிவையோ அல்லது இளநீர் மட்டைகளையோ இட்டு ஒரு படிவம் போன்ற பகுதியை ஏற்படுத்த வேண்டும்.
இந்த படிவ பகுதியின் ஆழமானது 10 முதல் 15 செ.மீட்டர் அளவில் இருந்தால் போதுமானது. இந்த படிவத்தின் மீது மாட்டுச்சாணத்தையும், மற்றக்கழிவுகளையும் கலந்து பாதிமக்கிய கலவையை இடவேண்டும். விவசாயக் கழிவுகளை நன்கு வெட்டி எடுத்து மாட்டுச்சாணத்துடன் கலந்து, 20 முதல் 25 நாட்கள் தண்ணீர் தெளித்து வந்தால் பாதி மக்கிய கழிவு கிடைக்கும். பின்னர் இதன் மீது நீர் தெளித்து அதன் மேல் மண்புழுக்களை இடவேண்டும். மேல் சொன்ன அளவில் அமைக்கப்பட்ட சில்பான் பாய் அமைப்பில் ஒன்றரை டன் அளவுக்கு கழிவுகளை கொட்டி வைக்க முடியும். இந்த அளவு கழிவை மண்புழு உரமாக மாற்ற சுமார் 3 கிலோ என்ற அளவில் மண்புழுக்களை இட வேண்டும்.
No comments:
Post a Comment